சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: ஆர்.பாலகிருஷ்ணன்₹165.00
அகழ்வாய்வு, மொழியியல், புவியியல், மேலும் சமூகவியல் போன்றவற்றின் அடிப்படையில் சிந்துவெளிப் பண்பாட்டைப் பற்றிய உறுதியான சான்றாதாரங்களையும் கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தன்னுடைய முடிவுகளை அழுத்தமாக முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன்.
தன்னுடைய புதிய கருத்துகளை மொழியியல், சிந்துவெளி நகர அமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைகளின் மேல் நிறுத்தி விவாதிக்கிறார் பாலகிருஷ்ணன். தமிழில், அநேகமாக அனைத்து திராவிட மொழிகளிலும், மேல் என்றால் மேற்கு, கீழ் என்றால் கிழக்கு என்ற பொருள் இயல்பானது. இந்த மொழியியல்பின் அடிப்படையிலான எண்ண ஓட்டத்தில் தங்கள் நகர அமைப்புகளை சிந்துவெளி மக்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஈரான், ஆஃப்கானிஸ்தான், பலோசிஸ்தான், பாகிஸ்தான் முதல் இந்தியாவின் மகாராஷ்டிரம் வரை அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள சிந்துவெளி நாகரிகத் தடய நகரங்களின் மூலைமுடுக்குகளைத் தேடி, தரவுகளையும் தகவல்களையும் அலசி வடிகட்டித்தருகிறார் பாலகிருஷ்ணன். அகழ்வாய்வின் மூலம் நமக்குத் தெரியவந்திருக்கும் மாநகரங்களான மொஹஞ்சதாரோ-ஹரப்பாவும் சரி, சிறு நகரங்களான ஸூர்கோட்டா மற்றும் ஸூட்காஜென்தோர் ஆனாலும் சரி, அனைத்து சிந்து சமவெளி நகரங்களிலும் மேடான, உயர்ந்த மேற்குப் பகுதிக் கட்டிட அமைப்புகளும், தாழ்வான கிழக்குப் பகுதிக் குடியமைப்புகளும் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள் எதேச்சையானவை அல்ல. முன்யோசனையின் விளைவு என்று முறையான ஆதாரங்களைக் கொண்டு வாதிடுகிறார் பாலகிருஷ்ணன்.
மேல்-கீழ், முன்-பின்
திராவிட மொழிகளில் மட்டுமே புவிமைய (topo-centric) அடிப்படையில் திசை சுட்டும் சொற்கள் அமைந்துள்ளன. சம்ஸ்கிருதம் மற்றும் அது சார்ந்த இந்தோ-ஆரிய மொழிகளில் திசை சுட்டும் சொற்கள் மனிதமைய (anthropo-centric) ரீதியில் அமைந்திருப்பதை பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். மனிதமைய நோக்கின் காரணமாக, இந்தோ-ஆரிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோரின் சிந்தனையில் கிழக்கு என்பது ‘முன்’ என்றும், மேற்கு என்பது ‘பின்’ என்றும் உணரப்படுகின்றன. இந்த உணர்வு சிந்துவெளி நகர அமைப்பில் வெளிப்படுவதில்லை என்பதை ஒப்பிட்டுக் காண்பிக்கிறார் பாலகிருஷ்ணன். சிந்துவெளி ஊர்ப் பெயர்களிலும் ‘முன் – பின்’ தடயம் காணப்படவில்லை. மாறாக, ‘மேல் கீழ்’ பெயர்கள் ஏராளமாகத் தென்படுகின்றன என்ற உண்மையைப் புள்ளிவிவரப்படுத்தி அட்டவணைகள், அட்ச-தீர்க்க ரேகைகளுடன் வழங்குகிறார்.
– இந்து தமிழ் திசை
Delivery: Items will be delivered within 2-7 days
Kmkarthikn –
சிந்துச்சமவெளி நாகரிகத்தை பலர் உரிமை கொண்டாடி வரும் இந்த நிலையில் அது தமிழர்களின் பண்பாடே என்று தன் பங்கிற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார் ஆர்.பா அவர்கள். {அதுவும் ஊரின் பெயர்களை ஆதாரமாகக் கொண்டு} சிந்துச்சமவெளி என்று சொல்லப்படுகிற இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்றளவும் உச்சரிப்பு மாறாமல் சில ஊரின் பெயர்கள் தமிழிலேயே இருப்பதை கண்டறிந்து எடுத்துரைக்கிறார். கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை, தேனூர் இதுபோன்ற பல நூறு ஊரின் பெயர்கள் இன்றளவும் பாகிஸ்தானில் காணக்கிடைக்கிறது என்கிற அவரது வாதம் வாசிப்போரை மெய்சிலிர்க்கச் செய்யும். இதுபோக திராவிடக் குடிகளின் எச்சம் இந்தியா முழுமைக்கும் எங்கெங்கெல்லாம் பரவிக்கிடக்கிறது என்ற நீண்ட பட்டியலையும் கொடுத்திருக்கிறார். என் விருப்ப புத்தகங்களிலேயே மகுடம் இந்த புத்தகம்.